விஜேராம இல்லத்தின் சாவிக் கொத்தை 7 நாட்களுக்குள் கையளிப்பார் மஹிந்த – அவரின் ஊடகப் பேச்சாளர் மனோஜ் கமகே தகவல்.

“சட்டத்துக்கு மதிப்பளித்து கொழும்பு – விஜேராம மாவத்தையில் உள்ள அரச இல்லத்தில் இருந்து மஹிந்த ராஜபக்ஷ வெளியேறினார். இன்னும் ஒரு வார காலத்துக்குள் வீடு அதிகாரபூர்வமாக மீளக் கையளிக்கப்படும்.” – என்று மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

“முப்பது வருட காலப் போரை முடிவுக்குக் கொண்டு வந்து, நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்திய தலைவருக்கு அரசு இப்படி நன்றிக் கடன் செலுத்துகின்றது என்பது மக்களுக்கு தற்போது புரிந்திருக்கும்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால் இந்த நிலைமையைப் பார்த்து நிச்சயம் மகிழ்ச்சியடைந்திருப்பார்.

எனினும், காட்டில் இருந்தாலும், நகரில் இருந்தாலும் சிங்கம் சிங்கம்தான். மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்கு ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்பட்டால் அதற்குரிய பொறுப்பை அரசு ஏற்க வேண்டும்.” – என்றார்.

அதேவேளை, மஹிந்த ராஜபக்ஷ நேற்று அரச மாளிகையில் இருந்து வெளியேறினாலும், அரசுக்குரிய சொத்துக்களைக் கையளிப்பதற்கு ஒரு வாரம் அவகாசம் கோரப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.