பெரும் விபத்து தவிர்ப்பு: நடுவானில் கழன்று விழுந்த விமான சக்கரம்
குஜராத்திலிருந்து மும்பை நோக்கிப் புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம் ஒன்றின் சக்கரங்களில் ஒன்று விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கழன்று விழுந்தது.
அந்த விமானம் மும்பையில் இறங்கும்போது என்னவேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால் தீயணைப்பு வீரர்களும் மருத்துவ உதவிக்குழுவினரும் அங்கு குவிக்கப்பட விமான நிலையமே பரபரப்பானது.
நேற்று, குஜராத்திலுள்ள Kandla விமான நிலையத்திலிருந்து மும்பை நோக்கி ஸ்பைஸ்ஜெட் விமானம் ஒன்று புறப்பட்டுள்ளது.
விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் அதன் சக்கரங்களில் ஒன்று கழன்று விழுவதை விமானக் கட்டுப்பாட்டு அறையிலிருந்தவர்கள் பார்த்து விமானிக்கு தகவல் கொடுத்துள்ளார்கள்.

அந்த தகவல் விமானம் இறங்கவேண்டிய மும்பை விமான நிலையத்தை எட்ட, தீயணைப்பு வீரர்களும் மருத்துவ உதவிக்குழுவினரும் அங்கு குவிக்கப்பட்டுள்ளார்கள்.
பெரும் பதற்றத்துடன் அனைவரும் காத்திருக்க, விமானி விமானத்தை பத்திரமாக தரையிறக்க, பயணிகளும் தீயணைப்பு வீரர்களும் மருத்துவ உதவிக்குழுவினரும் விமான நிலைய அதிகாரிகளும் நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளனர்.
New :
– A @flyspicejet plane's outer wheel flew away after take-off at Kandla
– Full emergency was declared at Mumbai airport
– Plane landed safely thankfully@DGCAIndia @AviationSafety pic.twitter.com/EFpG1t0jwh
— Tarun Shukla (@shukla_tarun) September 12, 2025
நேற்று மாலை 4.00 மணிக்கு அந்த விமானம் மும்பையில் பத்திரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. விமானத்தில் இரண்டு பக்கத்திலும் இரண்டிரண்டு சக்கரங்கள் இருக்கும் என்பதால், ஒரு பக்கமுள்ள ஒற்றை சக்கரத்துடன் விமானி விமானத்தை லாவகமாக தரையிறக்கியுள்ளார்.
இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. விமானி உடனடியாக விமானத்தை Kandla விமான நிலையத்தில் தரையிறக்காமல் மும்பை கொண்டுவந்ததும் சரியான முடிவாகும்.
ஏனென்றால், இத்தகைய அபாயகரமான சூழலில் நீளமான ஒரு ஓடுபாதையில் விமானத்தை இறக்குவதே புத்திசாலித்தனம். ஆக, விமானத்தை மும்பை கொண்டுவந்து தரையிறக்க திட்டமிட்ட விமானியின் முடிவு மிகச்சரியானது என்கிறார் முன்னாள் விமான ஊழியர் ஒருவர்.
