கேரள அரசின் தலைமைச் செயலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல்

கேரள அரசின் தலைமைச் செயலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரள அரசின் தலைமைச் செயலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக, அதிகாரிகளுக்கு மின்னஞ்சல் மூலமாக அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, காவல் துறை அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில், செயலக ஊழியர்கள் சிலர் மட்டும் வெளியேற்றப்பட்டு அங்கு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்தச் சோதனைகளில் சந்தேகப்படும்படியான எந்தவொரு பொருளும் கிடைக்காததினால், அந்த மிரட்டல் போலியானது என காவல் துறை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

மேலும், மிரட்டல் விடுக்கப்பட்ட மின்னஞ்சலின் விவரங்களின் மூலம் அந்த மர்ம நபரை பிடிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, கேரளம் மட்டுமின்றி நாட்டிலுள்ள பல்வேறு மாநிலங்களின் ஆட்சியர் அலுவலகங்கள், விமான நிலையங்கள் மற்றும் நீதிமன்றங்களுக்கு மின்னஞ்சல் மூலம் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுத்து வருவது தொடர் கதையாகியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.