முடிந்தால் தேர்தலை நடத்திக் காட்டுங்கள் – ஜே.வி.பிக்கு மொட்டுக் கட்சி சவால்.

“கடந்த நல்லாட்சி காலத்தில் மாகாண சபைத் தேர்தல் மாயமாவதற்கு ஜே.வி.பியும் துணை நின்றது. இன்று ஜனநாயகம் பற்றி பாடமெடுக்கும் அந்தக் கட்சி முடிந்தால் மாகாண சபைத் தேர்தலை நடத்திக் காட்ட வேண்டும்.”

இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வலியுறுத்தியுள்ளது.

அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் இது தொடர்பில் ஊடகங்களிடம் தெரிவிக்கையில்,

“30 வருட கால போரை முடிவுக்குக் கொண்டு வந்த பிறகு வடக்கு, கிழக்கு மக்களுக்கு அவர்களுக்குரிய பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்குரிய வாய்ப்பை மஹிந்த ராஜபக்ஷ ஏற்படுத்திக் கொடுத்தார். தோல்வியெனத் தெரிந்தும் வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தி, சபையை ஸ்தாபித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜே.வி.பி. என்பன இணைந்தே 2015 இல் நல்லாட்சியை உருவாக்கின. எனினும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் எழுச்சிக்கு அஞ்சி, மாகாண சபைத் தேர்தல் காணாமல் ஆக்கப்பட்டது. அரசுக்குரிய மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் இல்லாதபோது அதற்கு ஜே.வி.பி. ஆதரவளித்தது.

அந்தவகையில் தேர்தலைப் பிற்போடும் சூழ்ச்சிக்கு ஜே.வி.பியும் துணை நின்றுள்ளது. இன்று ஜனநாயகம் பற்றி அந்தக் கட்சியினர் பாடம் எடுக்கின்றனர். முடிந்தால் மாகாண சபைத் தேர்தலை நடத்திக் காட்ட வேண்டும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.