36 ஆண்டுகால சாதனைப் பணி: முதல் பெண் ரயில் ஓட்டுநர் சுரேகா யாதவ் ஓய்வு!

ஆசியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநர் 36 ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வு பெறவுள்ளார்.

இந்திய மாநிலமான மஹாராஷ்டிரா, சாத்தாரா மாவட்டத்தை சேர்தவர் சுரேகா யாதவ் (60). இவர் தனது 36 ஆண்டுகால பணிக்கு பிறகு ஓய்வு பெறவுள்ளார்.

எலக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங்கில் டிப்ளமோ படிப்பை முடித்த சுரேகா யாதவ் தனக்கு 24 வயதாக இருக்கும்போது இந்திய ரயில்வேயில் உதவி ஓட்டுநராக சேர்ந்தார்.

இதனால் இந்தியாவில் மட்டுமல்லாது ஆசியாவிலேயே முதல் பெண் ரயில் ஓட்டுநர் என்ற பெருமையை பெற்றார் சுரேகா.

இதையடுத்து, 1996-ம் ஆண்டில் சரக்கு ரயிலை இயக்கிய சுரேகா, 2000-ம் ஆண்டு முதல் பயணிகள் ரயில்களை ஓட்டத் தொடங்கினார்.

இந்நிலையில், 36 ஆண்டுகால ரயில்வே பணிக்கு பிறகு வரும் செப்டம்பர் 30-ம் திகதி அன்று ஓய்வு பெறுகிறார் சுரேகா.

தனது பயணத்தின் இறுதியாக ஹஸ்ரத் நிஜாமுதீன்-CSMT ராஜ்தானி எக்ஸ்பிரஸை (ரயில் எண்: 22222) சுரேகா ஓட்டியுள்ளார்.

மேலும், வந்தே பாரத் எக்ஸ்பிரஸை இயக்கிய முதல் பெண்மணி என்ற பெருமையையும் சுரேகா யாதவ் பெற்றார்.

எளிய பின்னணியில் இருந்து வந்த சுரேகா யாதவ் கடின உழைப்பு, விடாமுயற்சியால் தனது கனவுகளை நனவாக்கி மற்றவர்க்கு உதாரணமாக இருக்கிறார்.

பாரம்பரியமாக ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் இந்திய ரயில்வே துறையில் சுரேகாவுக்கு பிறகு தற்போது 1500 பெண் ஓட்டுநர்கள் உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.