மாகாண சபைத் தேர்தலை மிக விரைவில் நடத்துங்கள் – அநுரவிடம் மனோ வலியுறுத்து.
மாகாண சபைத் தேர்தலை மிக விரைவில் நடத்துவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் வலியுறுத்தினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-
“மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டாக வேண்டும். தேர்தல் முறைமை தொடர்பான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் அன்று என்னுடன் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இடம் பிடித்திருந்தார். பழைய முறைமையின் கீழ் தேர்தலை நடத்துவதற்கு அன்று அவர் இணக்கம் வெளியிட்டிருந்தார்.
எனவே, மாகாண சபைத் தேர்தலைப் பழைய முறைமையில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.
தேர்தல் முறைமைதான் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குத் தடையாக உள்ளது. இதனை இலகுவில் சரி செய்யலாம். நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள தனிநபர் பிரேரணையை, அரசு ஏற்று அதனை நிறைவேற்றி இதற்கு வழிசமைக்க வேண்டும்.” – என்றார்.
