யாழ்.பல்கலைக்கழகக் கலைப்பீட இளங்கலைமாணி ஆய்வு மாநாடு.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் ஐந்தாவது இளங்கலைமாணி ஆய்வு மாநாடு நாளைமறுதினம் புதன்கிழமை நடைபெறவுள்ளது.
பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் காலை 9 மணிக்கு ஆரம்பமாகவிருக்கும் இந்த ஆய்வுமாநாட்டில் முதன்மை விருந்தினராக பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா கலந்துகொள்ளவுள்ளார். ஆய்வு மாநாட்டுக்கு கலைப்பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமை தாங்கவுள்ளார்.
இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞானத்துறை ஓய்வுநிலைப் பேராசிரியர் எஸ். சந்திரபோஸ் திறப்புரையை ஆற்றவுள்ளார்.
இம்முறை நடைபெறும் ஐந்தாவது மாநாடு “வெவ்வேறு துறைகளை இணைத்து மாற்றங்களை வலுவூட்டுவதற்காக அறிவைச் செயற்படுத்துதல்” என்னும் தொனிப்பொருளோடு 16 ஆய்வுத் தடங்களில் நடைபெறவுள்ளது.
இளங்கலைமாணி பட்டக்கற்கையின் இறுதியாண்டில் மாணவர்கள் நிறைவுறுத்திய ஆய்வுகளின் அளிக்கையாக இந்த மாநாடு அமையவுள்ளது.
