பாதாள உலகக் குழு விவகாரம்: தெற்குக்குக் கறுப்பு முத்திரை! வடக்குக்கு வெள்ளையடிப்பு!! – இப்படிச் சீறுகின்றது மஹிந்த அணி.
பாதாள உலகக் குழு விடயத்தில் தெற்குக்குக் கறுப்பு முத்திரை குத்திவிட்டு, வடக்குக்கு வெள்ளையடிப்பு செய்யும் நடவடிக்கையே தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் இடம்பெறுகின்றது என்று கடும் சீற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன ஊடகங்களிடம் இந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தெற்குக்கு கறுப்பு கரையை ஏற்படுத்திவிட்டு வடக்குக்கு வெள்ளையடிப்பு செய்யும் நடவடிக்கை தற்போது இடம்பெறுகின்றது. பாதாள உலகக் குழு, ஐஸ் மற்றும் போதைப்பொருள் உள்ளிட்ட விடயங்கள் தெற்கு மீது சுமத்தப்படுகின்றது.
ஆனால், வடக்கில் இருந்தே இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு இவர்கள் (குற்றவாளிகள்) தப்பிச் சென்றுள்ளனர். இது பற்றி கதைக்கப்படுவதில்லை. மாறாக தெற்குக்கு கறுப்பு முத்திரை குத்தும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது.
டயஸ் போராக்களை திருப்திப்படுத்துவதற்காகவே இப்படி செய்யப்படுகின்றது.” – என்றார்.
