மன்னார் மக்களின் குரல்களுக்கு வலுச்சேர்க்க களத்தில் இறங்கியது மெதடிஸ்த திருச்சபை!

மன்னார் காற்றலை மின் உற்பத்தி ஆலை விவகாரம் மக்களின் நலன்களுடன் அவர்களது கருத்துக்களுக்கும் முதன்மை கொடுக்கப்பட வேண்டும் என்று இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் முகாமைக் குரு
கந்தையா ஜெகதாஸ் தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு கூறிய அவர் மேலும் கூறுகையில்,

“இன்று மன்னார் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுள் ஒன்றாக இந்த காற்றலை விவகாரம் மாறியுள்ளது.

அரசு கூறுகின்றது குறித்த திட்டத்துக்கு அனுமதி கொடுக்கப்பட்டுவிட்டது, அது நடைமுறைப் படுத்தப்படும் என்று.

மன்னார் ஆயருடன் ஜனாதிபதி சந்தித்த போதும் இதையே கூறியிருந்தார். ஆனால், மன்னார் ஆயர் இன்றும் மக்களின் விருப்பத்தின் பக்கமே இருக்கின்றார்.

உலக நாடுகள் பலவற்றில் இன்றைய காலச் சூழலில் இயற்கை மின் உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன.

அதனால் அவர்கள் தங்கள் நாடுகளில் மக்கள் வாழிடம் அற்ற பகுதிகளில்தான் இவ்வாறான திட்டங்ககை நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.

இதேநேரம் இந்தத் திட்டம் மன்னாரின் இயற்கையையும் சுற்றுச் சூழலையும் கடல் உயிரினங்களையும் பாதிக்கும் என எமது புவியியல் ஆய்வாளர் நாகமுத்து பிரதீபராஜாவும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, மக்களின் கோரிக்கை இன்று 80 நாள்களைக் கடந்து போராட்டமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் மக்களின் நலன்களில் நாமும் பங்காளர்களாக இருந்து அவர்களது போராட்டத்தையும் கோரிக்கையையும் வலுச் சேர்க்க முடிவு செய்துள்ளோம்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.