சஜித்தின் தலைமைத்துவத்தின் கீழ் ஒன்றிணைய ஐ.தே.க. தயாரில்லை – இப்படிச் சொல்கின்றார் அஜித் மானப்பெரும.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைத்துவத்தின் கீழ் தனிக்கட்சியாக ஒன்றிணைவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தயாரில்லை என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் அஜித் மானப்பெரும தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
“அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைப்பதே ஐக்கிய தேசியக் கட்சியின் நோக்கமாகும். இந்த நடவடிக்கையானது தனியொரு கட்சிக்கு தலைமைத்துவத்தை வழங்கல் அல்ல.
அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைக்கும் நோக்கிலேயே ஹரின் பெர்னாண்டோவுக்குப் புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது.” – என்றார்.
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பவற்றை ஒன்றிணைப்பதற்குரிய முயற்சி இடம்பெற்று வருகின்றது.
இவ்வாறு இரு தரப்புகளும் இணைந்து மாகாண சபைத் தேர்தலை பொதுப் பட்டியலின் கீழ் எதிர்கொள்வதற்குரிய ஏற்பாடும் இடம்பெற்று வருகின்றது எனத் தகவல் வெளியாகியுள்ள நிலையிலேயே ஐ.தே.க. உறுப்பினரான அஜித் மானப்பெரும மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
