வீட்டுக்குள் அத்துமீறி வெறியாட்டம்! கூரிய ஆயுதங்களுடன் ஐவர் கைது!!

வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்து உரிமையாளர்களைத் தாக்கிய கும்பல் கூரிய ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளது.

களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட விகாரை வீதியில் அமைந்துள்ள வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்து வீட்டு உரிமையாளர்களை அச்சுறுத்திப் பலமாகத் தாக்கிக் காயப்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய 5 சந்தேகநபர்கள் களுத்துறை பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் களுத்துறை பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளின் அடிப்படையில் களுத்துறை பிரதேசத்தில் வைத்து இரண்டு சந்தேகநபர்கள் முதலில் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களிடமிருந்து கிடைத்த தகவலுக்கமைய ஏனைய மூன்று சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் தகராறு காரணமாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அத்துடன், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பல பிரதேசங்களில் நபர்களைத் தாக்குதல், அச்சுறுத்துதல் மற்றும் வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து பொருட்களை உடைத்து சேதப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள என்றும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்களிடமிருந்து 5 கூரிய ஆயுதங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளைக் களுத்துறைப் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.