மீண்டும் கொழும்பு வந்த மஹிந்த!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் கொழும்பில் குடியேறியுள்ளார் எனத் தெரியவருகின்றது.

நுகேகொடை, மிரியான பகுதியிலேயே அவர் குடியேறியுள்ளார் என்று சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அரசியல் நடவடிக்கை, இராஜதந்திர சந்திப்புகள் மற்றும் மருத்துவ சிகிச்சை என்பவற்றைக் கருதியே மஹிந்த மீண்டும் கொழும்பு வந்துள்ளார் எனக் கூறப்படுகின்றது.

கொழும்பு, 7 விஜேராம மாவத்தையிலுள்ள அரசின் உத்தியோகபூர்வ வதிவிடத்திலேயே மஹிந்த தங்கி வந்தார்.

எனினும், முன்னாள் ஜனாதிபதிகளுக்குரிய சிறப்புரிமைகளை நீக்கும் சட்டம் நீக்கப்பட்ட பின்னர் அங்கிருந்து மஹிந்த வெளியேறினார்.

தங்காலையில் உள்ள தமது பூர்வீக இல்லமான கால்டன் இல்லத்துக்கு மஹிந்த சென்றிருந்தார்.

மக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் நாளாந்தம் அவரைச் சந்திக்க வருவது தொடர்பான செய்திகளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வெளியிட்டு வந்தது.

இந்நிலையிலேயே அவர் கொழும்பு வந்துள்ளார். நுகேகொடை – மரியான பகுதியிலேயே கோட்டாபய ராஜபக்ஷ, சமல் ராஜபக்ஷ ஆகியோரின் வீடுகளும் அமைந்துள்ளன.

Leave A Reply

Your email address will not be published.