ரணிலும் சஜித்தும் இணைய வேண்டும் – ரவி வலியுறுத்து.
ரணில் விக்கிரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாஸ ஆகியோர் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
இதன்போது ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பவற்றை ஒன்றிணைப்பது தொடர்பில் முன்னெடுக்கப்படும் முயற்சி தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ரணில் விக்கிரமசிங்க தலைமைப் பதவியில் இருந்து விலகுகின்றாரா அல்லது இல்லையா என்பது முக்கியம் அல்ல. அவரும், சஜித்தும் இணைந்து செயற்பட வேண்டியதுதான் முக்கியம்.
ஒன்றிணைவுக்காகவே நானும் பாடுபட்டு வருகின்றேன். எனினும், அதனை நான் வெளியில் காட்டிக்கொண்டு பிரச்சாரம் தேடவில்லை.
அதேபோல் சிறு கட்சிகளையும் இணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளேன்.
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பன இணைந்த பின்னர் ஏனைய சிறு கட்சிகளையும் இணைத்துக்கொள்ள வேண்டும். அதற்கான சிறப்பான ஆரம்பம் கொழும்பில் வழங்கப்பட்டுள்ளது.” – என்றார்.
