2 ஆண்டு காதல்.. திருமணமான 24 மணி நேரத்தில் விவாகரத்து கோரிய மருத்துவர் மற்றும் பொறியாளர்!
தம்பதிகள், தங்களுக்கிடையே சேர்ந்து வாழ முடியாத அளவிற்கு கருத்து வேறுபாடு வரும் போது, விவாகரத்து செய்வது தற்போது அதிகரித்து வருகிறது.
ஆனால், ஒரு புதுமண காதல் தம்பதி திருமணமான 24 மணி நேரத்தில் விவாகரத்து செய்துள்ளனர்.
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தின் புனேயில் மருத்துவராக பணியாற்றி வரும் பெண்ணும், கப்பலில் பொறியாளராக பணியாற்றி வரும் ஆண் ஒருவரும் 2 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்துள்ளனர்.
காதலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடிவெடுத்து இருவரும் திருமணம் செய்துள்ளனர்.
ஆனால், திருமணமான 24 மணி நேரத்திலே இருவரும், பிரிந்து வாழப்போவதாகவும், விவாகரத்து பெறப்போவதாகவும் அறிவித்துள்ளனர்.
என்ன காரணம்?
இது குறித்து பேசிய அந்த விவாகரத்து வழக்கை கையாண்ட வழக்கறிஞர், “கணவன்-மனைவி இடையேயான சித்தாந்த வேறுபாடுகள் மிகவும் ஆழமாக இருந்ததால், அவர்கள் உடனடியாகப் பிரிந்து செல்ல முடிவெடுத்தனர். இந்த வழக்கில் வன்முறை அல்லது குற்றவியல் தவறு செய்ததாக எந்த குற்றச்சாட்டும் இல்லை.
திருமணத்திற்குப் பிறகு, கணவர் அவரது மனைவியிடம், தான் ஒரு கப்பலில் வேலை செய்வதால், எப்போது, எங்கு பணியமர்த்தப்படுவேன், எவ்வளவு காலம் வெளியூரில் இருப்பார் என்பதைக் குறிப்பிடத் தெரியவில்லை.
திருமணத்திற்கு முன்பு இருவரும் 2 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், இவ்வளவு முக்கியமான பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படாதது ஆச்சரியமாக உள்ளது.
இந்தியாவில் பொதுவாகா விவாகரத்து வழக்குகள் முடிவிற்கு வர நீண்ட காலம் ஆகும் நிலையில், திருமணம் முடிந்த மறுநாளே தம்பதியினர் தனித்தனியாக வாழத் தொடங்கியதால், இந்த வழக்கு விரைவாக தீர்க்கப்பட்டது.” என தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில், 2014 ஆம் ஆண்டில், மணப்பெண் தோழிகளுக்கு மணமகன் வழங்கிய சிற்றுண்டியால் ஏற்பட்ட பிரச்னையால் 90 நிமிடத்தில் விவாகரத்தில் முடிந்தது.
இதே போல், குவைத்தில், திருமண நிகழ்ச்சிகள் முடிந்து மணமக்கள் வீட்டிற்கு கிளம்ப தயாரான போது, மணமகள் கால் தவறி கீழே விழுந்தார். அப்போது மணமகன், “பார்த்து நடக்கத்தெரியாதா முட்டாள்” என்று திட்டியதால், திருமணமான 3 நிமிடத்தில் விவாகரத்து பெறப்போவதாக மணப்பெண் தெரிவித்தார்.
