சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை உடன் நடத்துங்கள் – அரசிடம் சஜித் மீண்டும் வலியுறுத்து.

டித்வா புயலால் இலங்கைக்குப் பேரிழப”டித்வா சூறாவளியால் இலங்கைக்குப் பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, விரைந்து சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை நடத்துங்கள்.”

இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

“டித்வா சூறாவளியால் நாட்டுக்கு ஏற்பட்ட இழப்பு பெரும் இழப்பாகும். மிகப்பெரிய நிதி இழப்புகளை இது ஏற்படுத்தியுள்ளது.

அரச தரப்பில் இருக்கும் பலர் என்ன விடயங்களைச் சொன்னாலும், இந்த இழப்பை எதிர்கொண்டு, அதைத் தாண்டி வேகமாக முன்னேறுவதற்குச் சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை கூட்ட வேண்டிய தேவைப்பாடு எமக்கு காணப்படுகின்றது.

இது குறித்துப் பேசும்போது, அரசு இதில் அலட்சியமாக இருப்பது போலவே தெரிகிறது.

உலக வங்கி நடத்திய மதிப்பீட்டின் பிரகாரம், உட்கட்டமைப்பு வசதிகளில் மட்டும் 4.1 பில்லியன் அமெரிக்க டொலர் இழப்பு ஏற்பட்டுள்ளது.

எனினும், நமது நாடு இதுவரை பெற்றுள்ள நன்கொடைத் தொகை ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களையே நெருங்கியுள்ளது.
வாழ்வாதாரங்கள் சீரழிந்து போய், பல தொழில்கள் அழிந்து போயுள்ளன.

ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றுமாறு நாம் அரசிடம் கேட்டுக்கொள்கின்றோம். கூறிய விடயங்களை அவ்வாறே நடைமுறைப்படுத்துங்கள்.

அவ்வாறே சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டைக் கூட்டுங்கள். தாமதமின்றி உலகின் கவனத்தை நாட்டின் பக்கம் திருப்பிக்கொள்ளுங்கள்.

சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சு நடத்தி சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை மாற்றியமைப்பதற்கு நடவடிக்கை எடுங்கள்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.