அரசியல் தீர்வு குறித்து ஜனாதிபதி மௌனம்!

“ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு என்ன என்பது பற்றி இதுவரை வாய் திறந்து பேசவில்லை. இந்நிலையில் தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு காணப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் இப்போது கூறுவதை எப்படி நம்புவது?”

இவ்வாறு ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் ஊடகப் பேச்சாளரும் அந்தக் கூட்டணியின் பங்காளிக் கட்சியான ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி எழுப்பினார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு, தமிழ் மக்களின் நீண்ட கால அரசியல் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வழங்கும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்திருந்தார். தமிழ் மக்களை இந்த அரசு ஒருபோதும் ஏமாற்றாது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பில் கருத்துரைக்கும்போதே சுரேஷ் பிரேமச்சந்திரன் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இந்த அரசு இன்று வரை தமிழ் மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றவில்லை. முக்கியமான சில உறுதிமொழிகளாகக் கருதப்படும் காணி விடுவிப்பு, பயங்கரவாதத் தடைச் சட்டம் முழுமையாக நீக்கம், தேசிய இனப்பிரச்சினைக்கு உரிய தீர்வு ஆகிய உறுதிமொழிகள் இன்னமும் நிறைவேற்றப்படாமல் உள்ளன.

ஜனாதிபதி என்பவர் முப்படைகளின் தளபதி. அவரால் மிக விரைவாகக் காணிகளை விடுவிக்க முடியும். ஆனால், அவர் ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் நிறைவடைந்துள்ள நிலையில் வடக்கு, கிழக்கில் எவ்வளவு காணிகளை விடுவித்துள்ளார்? யாழ்ப்பாணத்தில் விரல் விட்டுச் சொல்லக்கூடிய அளவுக்கு காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளனா? இல்லை.

ஆகவே, அவர்கள் செய்யக்கூடிய விடயங்கள் என்று சொல்லப்படுபவை கூட இன்னும் செய்யப்படவில்லை.

இவ்வாறான நிலையில், தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு காணப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் இப்போது கூறுவதை எப்படி நம்புவது?

தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் கடந்த ஒரு வருட காலத்தில் அவர்கள் எந்த விளக்கத்தையும் கொடுக்கவில்லை.

13 ஆவது திருத்தச் சட்டம் இல்லாமல் செய்யப்படும் என்று அவர்கள் கூறினார்கள். அப்படியாயின் அந்த இடத்துக்கு என்ன வரப்போகின்றது? என்னத்தைக் கொண்டு அதை மாற்றீடு செய்யப் போகின்றார்கள்? அந்த இடத்தில் வரப்போவது சமஷ்டியா? அல்லது வேறுவிதமான அதிகாரப் பகிர்வா? அதை எவ்வாறு செய்யப்போகின்றார்கள்?

அவர்களது கட்சியில் இருக்கக்கூடிய செயலாளர் ரில்வின் சில்வாவோ அல்லது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவோ கூட தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு என்ன என்பது பற்றி இதுவரை வாய் திறந்து பேசவில்லை.

இவர்களும் ஏனைய அரசுகளைப் போல் தமிழ் மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கின்றார்கள் என்பதுதான் உண்மை. ஆகவே, அவற்றை அவர்கள் மாற்ற வேண்டுமெனில் பல விடயங்களை அவர்கள் செய்ய வேண்டும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.