ஒடிசாவில் தனியார் விமானம் விபத்து: 6 பேர் காயங்களுடன் நூலிழையில் உயிர் தப்பினர்!

ஒடிசாவில் தனியார் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 6 பேர் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.

சனிக்கிழமை ஒடிசா மாநிலம் சுந்தர்கர் மாவட்டத்தில் சிறிய ரக தனியார் விமானம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அவசர அவசரமாக தரையிறங்கிய போது எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியது.

இந்த சம்பவத்தின் போது விமானத்தில் 6 பேர் வரை பயணித்த நிலையில், அனைவரும் சிறிய காயங்களுடன் உயிர் தப்பியதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்தியாஒன் ஏர்(IndiaOne Air) என்ற விமான நிறுவனத்திற்கு சொந்தமான செஸ்னா 208 என்ற சிறிய ரக விமானம் புவனேஸ்வரில் இருந்து ரூர்ஹேலா நோக்கி பறந்து கொண்டிருந்த போது ஜல்டா என்ற பகுதியில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது.

விபத்தின் போது விமானத்தில் 4 பயணிகள் மற்றும் 2 விமான ஊழியர்கள் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒடிசாவின் வணிகம் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் பி.பி ஜேனா, இந்த விபத்து குறித்து மாநில அரசுக்கும், சிவில் விமான போக்குவரத்து இயக்குநகரத்திற்கும் தெரிவிக்கப்பட்டு இருப்பதாகவும், விபத்து குறித்த முறையான விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.