மாகாண சபைத் தேர்தல்: இவ்வருடம் சாத்தியமற்றது! – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அறிவிப்பு.
“மாகாண சபைத் தேர்தலை இந்த ஆண்டு நடத்துவது சாத்தியமற்றது. இருப்பினும், தேர்தலை நடத்துவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.”
இவ்வாறு அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அண்மையில் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் ஒன்றின் பின்னர் வடக்கு, கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ சந்தித்தார். அப்போது, மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குரிய நடவடிக்கைகளை அரசு விரைவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தியபோதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
“மாகாண சபைத் தேர்தலில் காணப்படும் சட்டச் சிக்கல்களுக்கு விரைவில் தீர்வு காணப்படும். அதற்குரிய ஆரம்பகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சகல தரப்பினருடன் கலந்துரையாடி முரண்பாடற்ற தீர்வை எடுக்க வேண்டும்.
எவ்வாறாயினும், இந்த ஆண்டு மாகாண சபைத் தேர்தலை நடத்துவது சாத்தியமற்றது. டித்வா புயல் தாக்கத்தின் பின்னர் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து மக்களை மீட்டெடுக்க வேண்டும். இலங்கையை மீளக்கட்டியெழுப்பும் திட்டத்துக்கு முன்னுரிமை வழங்கப்படும்.” – என்றார்.
