பொலிஸாரின் கட்டளையை மீறிப் பாய்ந்த லொறி மீது துரத்தித் துரத்திச் துப்பாக்கிச்சூடு – முறியடிக்கப்பட்ட மாட்டுக் கடத்தல்; போதைப்பொருளுடன் இருவர் கைது.
பொலிஸாரின் உத்தரவை மீறிச் சென்ற லொறி மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அந்ததொல பகுதியில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.
அம்பலாங்கொடை நோக்கி சென்ற லொரியொன்றைச் சோதனைக்காகப் பொலிஸார் நிறுத்துமாறு சைகை செய்தபோது, நிற்காமல், பொலிஸாரின் உத்தரவை மீறி, அந்த லொறி சென்றுள்ளது.
இதையடுத்து பொலிஸ் அதிகாரிகள் லொறியைத் துரத்திச் சென்று நிறுத்த முற்பட்டபோது, லொறி தொடர்ந்து செல்லவும், துப்பாக்கிச்சூடு நடத்தியதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து அந்த லொறியைச் சோதனையிட்டபோது, 10 பசுக்கள் மற்றும் 4 எருமை மாடுகள் காணப்பட்டன. அவற்றில் ஒன்று தலை துண்டிக்கப்பட்டிருந்தது.
அதனையடுத்து, லொறியில் இருந்த இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதுடன், அவர்களிடமிருந்து 5 ஆயிரத்து 200 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் 42 மற்றும் 46 வயதுடையவர்கள் எனவும், அக்குரஸ்ஸ மற்றும் பேருவளை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
லொறியின் சாரதி மற்றும் மற்றொரு சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ள நிலையில், அவர்களைக் கைது செய்ய அம்பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
