ராஜபக்ஷக்கள் கொலையாளிகள் அல்லர் என்பதை நிரூபித்துவிட்டார் பொன்சேகா – இப்படி நாமல் பதிலடி.

இறுதிப் போரின் போது விடுதலைப்புலிகளின் தலைவர்கள் சரணடைவது தொடர்பாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வெளியிட்டுள்ள கருத்துக்கள் புதியவை அல்ல எனவும், ராஜபக்ஷக்கள் கொலையாளிகள் அல்லர் என்பதை அவரே இப்போது நிரூபித்துள்ளார் எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ எம்.பி. தெரிவித்தார்.

கொழும்பில் இன்று ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் குறிப்பிட்டார்.

பொன்சேகாவின்
சர்ச்சை கருத்து

முன்னதாக நேற்று ஊடக சந்திப்பொன்றை நடத்தியிருந்த முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, இறுதிப் போரின் போது விடுதலைப்புலிகளின் தலைவர்கள் சரணடைவது குறித்து ராஜபக்ஷ குடும்பத்தினர் பேச்சு நடத்தினார்கள் எனக் குறிப்பிட்டிருந்தார்.

“விடுதலைப்புலிகள் மூன்றாம் தரப்பிடம் சரணடைய விரும்பினர், ஆனால் ராஜபக்ஷக்கள் அவர்கள் இராணுவத்திடம் சரணடைய வேண்டும் என வலியுறுத்தினர். அந்தத் திட்டம் தோல்வியடைந்ததாலேயே உயிரிழப்புகள் ஏற்பட்டன. அவர்கள் சரணடைந்திருந்தால் பிரபாகரன் இன்று வடக்கின் முதலமைச்சராக இருந்திருப்பார்.” என்றும் பொன்சேகா தெரிவித்திருந்தார்.

நாமலின்
விளக்கம்

பொன்சேகாவின் இந்த கூற்றுத் தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த நாமல் ராஜபக்ஷ எம்.பி. பின்வருமாறு தெரிவித்தார்.

புதிய தகவல் அல்ல

“விடுதலைப்புலிகள் ஆயுதங்களைக் கைவிட்டு சரணடைய வேண்டும் என்று அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பகிரங்கமாகவே கோரிக்கை விடுத்திருந்தார். எனவே, பொன்சேகா கூறுவது ஒன்றும் புதிய தகவல் அல்ல.

மாறிவரும்
நிலைப்பாடு

வெள்ளைக்கொடியுடன் வந்தவர்களை மஹிந்த ராஜபக்ஷ கொலை செய்யச் சொன்னார் என்று முன்னர் கூறிய பொன்சேகா, இப்போது அதற்கு முரணான கருத்தை வெளியிடுகின்றார்.

உண்மை நிரூபணம்

எது எப்படியிருந்தாலும், ராஜபக்ஷக்கள் கொலையாளிகள் அல்ல என்பதையும், அவர்கள் போரை அமைதியான முறையில் முடிக்கவே முயற்சித்தனர் என்பதையும் உறுதிப்படுத்தியமைக்காக பொன்சேகாவுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

குறைந்தபட்ச உயிரிழப்புகளுடன் போரை முடிக்கவே மஹிந்த ராஜபக்ஷ விரும்பினார். தமிழ் மக்களுக்கு எதிராக ஒருபோதும் போர் தொடுக்கப்படவில்லை.” – என்று நாமல் எம்.பி. தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.