பொருளாதார இலக்குகளை அடைய கரம் கொடுக்கின்றது அமெரிக்கா! – அமைச்சர் அநுர கருணாதிலகவுடன் பேச்சு

இலங்கையின் துறைமுகம் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து அமெரிக்கா விசேட கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளது.

துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அநுர கருணாதிலக மற்றும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகத்தின் அதிகாரிகளுக்கு இடையில் நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்தச் சந்திப்பு குறித்து அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் பின்வரும் விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

உள்கட்டமைப்பு மேம்பாடு

இலங்கையின் துறைமுகம் மற்றும் விமானப் போக்குவரத்து துறைகளில் தீர்மானமிக்க உள்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துவதன் மூலம் வர்த்தகம் மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க முடியும்.

பிராந்திய பாதுகாப்பு

இந்தத் துறைகளில் ஏற்படுத்தப்படும் முன்னேற்றமானது, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை மிகவும் பாதுகாப்பான மற்றும் உறுதிமிக்க வலயமாக்குவதற்குப் பெரும் பங்களிப்பை வழங்கும்.

பொருளாதார வளர்ச்சி

இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த ஒத்துழைப்பு, இலங்கையின் நீண்டகால பொருளாதார இலக்குகளை அடைவதற்குத் துணையாக அமையும்.

இலங்கையின் அமைவிட முக்கியத்துவத்தைப் பயன்படுத்தி, சர்வதேச வர்த்தகத்தில் நாட்டின் பங்களிப்பை அதிகரிப்பது தொடர்பில் இந்தச் சந்திப்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.