தெலங்கானாவில் விஷம் வைத்து 100 தெரு நாய்கள் கொலை!

தெலங்கானாவில் விஷம் வைத்து 100 தெரு நாய்கள் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம், மஞ்சேரியல் மாவட்டத்தில் உள்ள கிஷ்தபூர் கிராமத்தில் மார்ச் 7-8 இடைப்பட்ட இரவில் கிட்டத்தட்ட 100 நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். இதுதொடர்பாக விலங்கு நல ஆர்வலர் கௌதம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதில், கிஷ்தபூர் கிராமத்தின் சர்பஞ்ச் மற்றும் கிராம பஞ்சாயத்து செயலாளர், இரண்டு நபர்களை வேலைக்கு அமர்த்தி, தெருநாய்களைக் கொன்று ஆற்றின் அருகே புதைத்ததாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

புகாரின் அடிப்படையில், ஜன்னாரம் காவல் நிலையத்தில் சர்பஞ்ச் மற்றும் கிஷ்தபூர் கிராம பஞ்சாயத்து செயலாளர் மீது பிஎன்எஸ் மற்றும் விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மேலும் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர். இந்த ஆண்டு ஜனவரி மற்றும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதங்களில் தெலங்கானாவின் பல்வேறு மாவட்டங்களில் தெருநாய்கள் பெருமளவில் கொல்லப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இதுவரை இப்படி பலியான தெரு நாய்களின் எண்ணிக்கை 1,300ஐ தொட்டுள்ளது. இதைத்தொடர்ந்து விலங்கு நல ஆர்வலர்கள் அளித்த புகார்களின் அடிப்படையில், சர்பஞ்ச்கள், அவர்களது கணவர்கள், கிராம பஞ்சாயத்து செயலாளர்கள் மற்றும் பலர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சமீபத்தில் நடைபெற்ற கிராம பஞ்சாயத்துகளின் தேர்தலின்போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காக இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறி வருவதாகவும் செய்திகள் தெரிவிகின்றன.

Leave A Reply

Your email address will not be published.