தேர்தலை இனியும் தாமதிக்காதே! – பழைய முறையிலாவது மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசுக்குக் கடும் அழுத்தம்.

இலங்கையில் நீண்டகாலமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தல்களை இனியும் தாமதப்படுத்தாமல், தேவையேற்படின் பழைய தேர்தல் முறையிலாவது உடனடியாக நடத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் கட்சிகளும் சிவில் சமூக அமைப்புகளும் ஒருமித்த குரலில் வலியுறுத்தியுள்ளன.

பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்

“வாக்குரிமை என்பது மக்களின் அடிப்படை உரிமை. மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படாவிட்டால், அந்தச் சமூகத்தில் சர்வஜன வாக்குரிமை முறையாகச் செயற்படுத்தப்படவில்லை என்றே அர்த்தம். புதிய தேர்தல் முறையைச் சீரமைக்கும் வரை தேர்தலை நடத்த மாட்டோம் என்று கூறுவது நியாயமான வாதம் அல்ல.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மற்றும் தற்போது சாணக்கியன் இராசமாணிக்கம் ஆகியோர் நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ள தனிநபர் பிரேரணையை அரசு தனது சொந்தப் பிரேரணையாக ஏற்றுக்கொண்டால், மிகக் குறுகிய காலத்தில் பழைய முறையிலேயே தேர்தலை நடத்தி முடிக்க முடியும். அவ்வாறு செய்யாமல் குழுக்களை நியமித்து காலத்தைக் கடத்துவது தேர்தலை நடத்தாமல் இருப்பதற்கான ஒரு வழியாகவே அமையும்.” – என்று முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

ரோஹண ஹெட்டியாராச்சி

“உண்மையிலேயே மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், அதனைப் பழைய முறையிலேயே நடத்த வேண்டும். புதிய முறையின் கீழ் தேர்தல் நடத்தப்படும் என்று கூறிக்கொண்டிருந்தால், அது மறு அறிவித்தல் வரை காலம் தாழ்த்தப்படுவதற்கே வழிவகுக்கும்.” – என்று பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று அதிகாரி ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

சமன் ரத்நாயக்க

“குழுக்கள் என்பவை வெறும் அறிக்கைகளைத் தயாரிப்பதோடு தமது பணியை முடித்துக்கொள்கின்றன. கடந்த அரசிடமும் தற்போதைய அரசிடமும் நாம் பல பரிந்துரைகளை முன்வைத்துள்ளோம். மாகாண சபை முறையை அரச அதிகாரிகள் ‘வெள்ளை யானை’ என விமர்சிக்கின்றனர். ஆனால், மக்களின் அன்றாடத் தேவைகளுடன் நேரடியாகத் தொடர்புடைய இந்த அதிகாரம் முறையாகச் செயற்படுத்தப்பட வேண்டும்.” – என்று முன்னாள் தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க தெரிவித்தார்.

அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மக்களின் பிறப்பு முதல் இறப்பு வரை மிக முக்கியமானவை. எனவே, ஒரு முழுமையற்ற ஜனநாயகச் சூழலைத் தவிர்ப்பதற்கு அரசு உடனடியாகத் தேர்தலை நடத்த முன்வர வேண்டும் என்று அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகளின் முக்கியஸ்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.