தரம் குறைந்த நிலக்கரியால் மின் உற்பத்தியில் வீழ்ச்சி! – மேலதிக சுமை நுகர்வோர் மீது சுமத்தப்படாது என்று ஜனாதிபதி உறுதி.

“நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியின் தரம் குறைவாக இருந்தமை மின் உற்பத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள போதிலும், அதனால் ஏற்படும் எவ்வித மேலதிக நுகர்வோர் கட்டணச் சுமையும் மக்கள் மீது சுமத்தப்பட மாட்டாது” என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றத்தில் உறுதியளித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று ஆற்றிய உரையின் போது, நிலக்கரி இறக்குமதி மற்றும் மின் உற்பத்தி நிலையங்களின் தற்போதைய நிலை குறித்து அவர் வழங்கிய விவரங்கள் வருமாறு:-

மின் உற்பத்தியில் பாதிப்பு

“நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தின் ஒவ்வொரு அலகும் தலா 270 மெகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்டும். இருப்பினும், நிலக்கரியின் தரம் காரணமாக இந்த மட்டம் மாறுபடுகின்றது. 900 மெகாவோட் மொத்த கொள்ளளவைக் கொண்ட குறித்த வளாகத்தில், தற்போது சில சந்தர்ப்பங்களில் 810 மெகாவோட் மாத்திரமே உற்பத்தியாகின்றது. இது இயந்திரக் கோளாறோ அல்லது கொள்முதல் முறைகேடோ அல்ல, மாறாக நிலக்கரியின் தரத்தில் உள்ள குறைபாடே காரணமாகும்.

தரப் பரிசோதனையும்
கொடுப்பனவுகளும்

நிலக்கரியின் தரம் ஆய்வகப் பரிசோதனைகள் மூலமே உறுதி செய்யப்படுகின்றது. ஆரம்பக் கட்ட சோதனைகளுக்குப் பிறகு 80 சதவீத கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன. எஞ்சிய 20 சதவீத கொடுப்பனவுகள், 2023 முதல் பயன்பாட்டில் உள்ள இந்தியாவின் சுயாதீன ஆய்வகத்தின் இறுதிப் பரிசோதனை முடிவுகளுக்குப் பின்னரே விடுவிக்கப்படுகின்றன. இதுவரை மூன்று நிலக்கரி கப்பல்கள் இந்தப் பரிசோதனைகளில் தோல்வியடைந்துள்ளன.

விநியோகஸ்தர்களுக்கு அபராதம்

தரம் குறைந்த நிலக்கரியை வழங்கிய நிறுவனங்களுக்கு எதிராகக் கடும் அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளன. சில சந்தர்ப்பங்களில் இறுதி 20 சதவீத கொடுப்பனவு மட்டுமன்றி, ஆரம்பத்தில் வழங்கப்பட்ட 80 சதவீத கொடுப்பனவிலும் ஒரு பகுதி மீளப் பெறப்பட்டுள்ளது. உதாரணமாக, ஒரு மெட்ரிக் தொன் 98 டொலர் என நிர்ணயிக்கப்பட்ட நிலக்கரி கப்பலுக்கு, அபராதங்களின் பின்னர் அதன் விலை 68 டொலராகக் குறைக்கப்பட்டுள்ளது.

மக்களுக்குச் சுமை இல்லை

தரம் குறைந்த நிலக்கரியால் ஏற்படும் இழப்புகள் அனைத்தும் விநியோகஸ்தர் நிறுவனங்களிடமிருந்தே அறவிடப்படும். அந்தச் சுமை ஒருபோதும் மின்சார நுகர்வோர் மீது சுமத்தப்பட மாட்டாது. தேவைப்படின் இது தொடர்பாகச் சட்ட ரீதியான நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.