சிவகங்கையில் பரபரப்பு: பிரச்சாரத்தின் போது அண்ணாமலை முகத்தில் விழுந்த செல்போன்!

சிவகங்கை,

தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அடுத்த மாதம் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி தலைவர் திருமாறன் களமிறங்கியுள்ளார். அவரை ஆதரித்து தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.

இந்நிலையில், திருப்பத்தூர் பஸ் நிலையம் அருகே பிரசாரத்தில் ஈடுபட்டபோது வேட்பாளர் திருமாறனுக்கும், அண்ணாமலைக்கும் பாஜக மற்றும் கூட்டணி கட்சியினர் மலர் மாலை அணிவித்தும் பூக்களை தூவியும் வரவேற்றனர்.

பூக்கள் வீசப்பட்டபோது திடீரென பூக்களோடு சேர்த்து ஒரு செல்போனும் வீசப்பட்டுள்ளது. அந்த செல்போன் பிரசார வாகனத்தில் நின்றுகொண்டிருந்த அண்ணாமலை முகத்தில் விழுந்தது.

இதனால் சற்று திகைத்த அண்ணாமலை பின்னர் அந்த செல்போனை எடுத்து உரியவரிடம் ஒப்படைத்தார். பிரசாரத்தின்போது பூக்களை வீசும்போது எதிர்பாராத விதமாக செல்போனும் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.