மஹவ வாவியில் நீராடிய இளைஞர் நீரில் மூழ்கிப் பரிதாப உயிரிழப்பு! – உறவினர் வீட்டுக்கு வந்த இடத்தில் விபரீதம்.
குருநாகல் மாவட்டத்தில் மஹவ பகுதியில் உள்ள வாவியில் நீராடிக்கொண்டிருந்த இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மஹவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடுவேரிய வாவியில் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை நீராடிக்கொண்டிருந்த போது அந்த இளைஞர் நீரில் மூழ்கி காணாமல்போயிருந்தார்.
அதனைத் தொடர்ந்து பிரதேச மக்கள் மற்றும் பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
17 வயதுடைய மொரட்டுவை பகுதியைச் சேர்ந்தவரே உயிரிழந்துள்ளார் எனக் கூறப்படுகின்றது.
உறவினர்களின் வீட்டுக்குச் சென்றிருந்த நிலையிலேயே இளைஞருக்கு மரணம் நேர்ந்துள்ளது என்று பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இது குறித்து தொடர்ந்து பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
