யுவதி ஒருவர் மின்னல் தாக்கி பெரிதாகி சாவு!
காலி, ஹபராதுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்வத்த பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மின்னல் தாக்கியதில் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக, இன்று அதிகாலை கொக்வத்த பகுதியிலுள்ள வீடொன்றின் மீது மின்னல் தாக்கியுள்ளது. இதன்போது வீட்டில் இருந்த இரண்டு பெண்கள் படுகாயமடைந்த நிலையில் மீபே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி 26 வயதுடைய யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று ஹபராதுவ பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் கொக்வத்த, ஹபராதுவ பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மின்னல் தாக்குதலுக்குள்ளான இருவரும் அப்பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிபவர்கள் எனவும், அவர்கள் தங்கியிருந்த விடுதி மீது மின்னல் தாக்கியதாலேயே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது எனவும் பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதேவேளை, காயமடைந்த மற்றைய பெண் மேலதிக சிகிச்சைகளுக்காக காலி, கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் ஹபராதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
