இந்திரவிழாவில் சுகாதாரச் சீர்கேடு: 6 வியாபாரிகளுக்குப் பிடியாணை! – அறுவருக்கு 1,30,000 ரூபா தண்டப்பணம்.

யாழ். வடமராட்சி, வல்வெட்டித்துறை இந்திரவிழாவின் போது சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாது செயற்பட்ட 6 உணவு நிலைய உரிமையாளர்களுக்குப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் அறுவருக்கு ஒரு இலட்சத்து முப்பதாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறை நகராட்சி மன்ற எல்லைக்குள் நடைபெற்ற இந்திரவிழாவை முன்னிட்டு, பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. நகர சபை பொதுச்சுகாதார பரிசோதகர் ப.தினேஸ் தலைமையிலான சுகாதாரக் குழுவினர், விழாப் பகுதியில் இயங்கிய உணவு நிலையங்களைச் சோதனையிட்டனர்.

இதன்போது ஐஸ்கிறீம் வாகனங்கள், காரம் சுண்டல் மற்றும் பானிப்பூரி விற்பனை நிலையங்கள் உட்பட 12 நிலையங்களில்,

* மருத்துவச் சான்றிதழ் இன்றி உணவுகளைக் கையாண்டமை.
* திண்மக் கழிவுகளைத் திறந்த வெளியில் வீசி சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்தியமை.
* அனுமதிக்கப்பட்ட தரமான கொள்கலன்களுக்குப் பதிலாக, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் ரகக் கொள்கலன்களைப் பொதியிடலுக்குப் பயன்படுத்தியமை

– ஆகிய சுகாதார சீர்கேடுகள் கண்டறியப்பட்டன.

இது தொடர்பாக பொதுச்சுகாதார பரிசோதகர் ப.தினேஸினால் நேற்று பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

விசாரணையின் போது முன்னிலையாகியிருந்த 6 வியாபாரிகள் தமது குற்றங்களை ஏற்றுக்கொண்டனர். இதனையடுத்து அவர்களுக்கு மொத்தம் ஒரு இலட்சத்து 30 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டது. அதேவேளை, நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறிய வெளிமாவட்டங்களைச் சேர்ந்த ஏனைய 6 வியாபாரிகளுக்கும் நீதிவான் பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டார்.

பொது நிகழ்வுகளின் போது சுகாதார விதிகளை மீறிச் செயற்படும் வியாபாரிகளுக்கு எதிராக இவ்வாறான கடும் நடவடிக்கைகள் தொடரும் என்று சுகாதாரத் துறையினர் எச்சரித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.