வாக்குமூலம் கேட்டு கபில மீது சித்திரவதை – ரமேஷ் பத்திரண குற்றச்சாட்டு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோரின் பெயர்களைக் குறிப்பிட்டு வாக்குமூலம் அளிக்குமாறு கபில சந்திரசேனவுக்குப் பாரிய அழுத்தம் கொடுக்கப்பட்டது என்று முன்னாள் அமைச்சர் ரமேஷ் பத்திரண பரபரப்புக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

கபில சந்திரசேன மற்றும் ரங்க ராஜபக்ஷ ஆகியோரின் மரணங்கள் தற்செயலானவை அல்ல என்று சுட்டிக்காட்டிய ரமேஷ் பத்திரண, மேலும் கூறியதாவது:-

“தன் மீது கட்டாயப்படுத்தி வாக்குமூலங்கள் பெறப்படுவதாகக் கூறி கபில சந்திரசேன உயிருடன் இருந்தபோதே சத்தியக்கடதாசி ஒன்றை வழங்கியிருந்தார். இவ்வாறான மரணங்கள் திட்டமிட்ட கொலைகளா அல்லது தற்கொலைக்குத் தூண்டும் மன ரீதியான சித்திரவதைகளா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ராஜபக்ஷ குடும்பத்தினரை வழக்குகளில் சிக்க வைக்க இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு ஊடாக அரசு இவ்வாறான கீழ்த்தரமான அழுத்தங்களைப் பிரயோகிக்கின்றது.

தற்போதைய அரசின் செல்வாக்கு வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதால், அதனை மறைக்கவே இவ்வாறான அச்சுறுத்தல் அரசியல் முன்னெடுக்கப்படுகின்றது.

மே தினக் கூட்டங்களில் நீதிமன்றத் தீர்ப்புகள் குறித்து ஜனாதிபதி முன்கூட்டியே அறிவிப்பது நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாரதூரமாகப் பாதிக்கும் செயலாகும்.” – என்றார்.

அரச நிர்வாகம் மற்றும் திறைசேரி விவகாரங்கள் குறித்து அவர் பல குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்தார்.

“திறைசேரியில் ‘ஹேக்கர்கள்’ மூலம் நிதி மோசடி செய்யப்பட்டுள்ளது. அனுபவமற்ற அரசியல் நியமனங்களால் அரச சேவை சீர்குலைந்துள்ளதோடு, நிலக்கரி மற்றும் கொள்கலன் மோசடிகளுக்கு இந்த நிர்வாகக் குறைபாடே காரணமாக அமைந்துள்ளது.” – என்று அவர் கூறினார்.

நீதித்துறை மற்றும் அரச சேவையைச் சுதந்திரமாக இயங்க விடுமாறு அரசை வலியுறுத்திய அவர், தமது கட்சி தற்போது நாடு தழுவிய ரீதியில் பலமான மறுசீரமைப்புப் பணிகளில் இறங்கியுள்ளது என்றும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.