முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம்: யாழ்பாணத்தில் பல இடங்களில் தமிழரசுக் கட்சியினர் அஞ்சலி!
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் வடக்கு – கிழக்கு எங்கும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில், இலங்கைத் தமிழரசுக் கட்சியினரால் யாழ்ப்பாணத்தின் பல்வேறு இடங்களில் அஞ்சலி நிகழ்வுகள் நேற்று முன்னெடுக்கப்பட்டன.
மானிப்பாய் பிரதேச சபையின் முன்றல், சங்கானை மற்றும் அராலி ஆகிய பகுதிகளில் இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.
இதன்போது இறுதிப் போரில் யுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளுக்காக சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், முள்ளிவாய்க்கால் அவலத்தின் குறியீடான ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’ காய்ச்சி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
இந்த நினைவேந்தல் நிகழ்வுகளில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார். அவருடன் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் சுகிர்தன், பிரதேச சபைகளின் தவிசாளர்கள், கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு தமது அஞ்சலிகளைத் தெரிவித்தனர்.
முள்ளிவாய்க்கால் மண்ணில் கொல்லப்பட்ட இலட்சக்கணக்கான உறவுகளின் தியாகங்களை நினைவுகூரும் வகையில், இந்த நினைவேந்தல் வாரம் முழுவதும் தமிழர் தாயகப்பகுதிகளில் பல்வேறு உணர்வுபூர்வமான நிகழ்வுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




