கிராண்ட்பாஸில் இளைஞர் ஒருவர் கொடூரமாக வெட்டிப் படுகொலை! – சந்தேகநபர்களைப் பிடிக்கப் பல கோணங்களில் பொலிஸ் விசாரணைகள் தீவிரம்.
கொழும்பு, கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெர்குசன் வீதி பகுதியில் இளைஞர் ஒருவர் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று தெரிவித்துள்ளது.
இக்கொலைச் சம்பவத்தில் உயிரிழந்தவர் மோதரை, உயன வீடமைப்புத் தொகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய நபர் எனப் பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கொலையுண்ட நபருக்கும் மற்றுமொரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாகவே இக்கொலைச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் எனப் பொலிஸார் பலத்த சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இப்படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கும், கொலைக்கான துல்லியமான பின்னணிக் காரணத்தைக் கண்டறிவதற்கும் கிராண்ட்பாஸ் பொலிஸார் பல கோணங்களில் மேலதிக விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
