எதிர்க்கட்சிகளின் ஆலோசனைகளைப் புறந்தள்ளினால் அரசை வீட்டுக்கு ஓட ஓட விரட்டுவார்கள் மக்கள்! – ஐக்கிய மக்கள் சக்தி பகிரங்க எச்சரிக்கை.

எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் ஆலோசனைகளுக்குச் செவிசாய்த்து, நாட்டின் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்கத் தவறினால், மக்கள் இந்த அரசை வீட்டுக்கு ஓட ஓட விரட்டியடிப்பார்கள் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார எச்சரித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமைகள் மற்றும் அரசியல் சூழ்நிலைகள் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாடு எதிர்கொண்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்குக் காத்திரமான மாற்றுத் திட்டங்களையும் ஆலோசனைகளையும் எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்றன. எனினும், அரசு சுயநலப் போக்குடன் செயற்படுவதோடு, இந்த ஆலோசனைகளைக் கண்டுகொள்ளாமல் புறந்தள்ளி வருகின்றது.

அரசின் இத்தகைய தன்னிச்சையான போக்கினால் நாளாந்தம் பொதுமக்களே சொல்லொணாத் துயரங்களை எதிர்நோக்குகின்றனர். எனவே, இனியாவது எதிர்க்கட்சிகளின் நியாயமான ஆலோசனைகளைக் கேட்டு, பொருளாதாரப் நெருக்கடிகளுக்குத் தீர்வு காண அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறின், மக்கள் பொறுமையிழந்து இந்த அரசை வீதிக்கு இறங்கி ஓட ஓட விரட்டியடிப்பது நிச்சயம்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.