இனி ஒருபோதும் அரசியலுக்கு வரமாட்டேன்! நாட்டுக்கான எனது கடமையை முடித்துவிட்டேன் என்றும் முன்னாள் அமைச்சர் அலி சப்ரி நெகிழ்ச்சி.

தான் இனி ஒருபோதும் தீவிர அரசியலுக்கு வரப்போவதில்லை என்று முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது, எதிர்காலத்தில் எத்தனை கோரிக்கைகள் விடுக்கப்பட்டாலும் மீண்டும் அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லையா என எழுப்பப்பட்ட கேள்விக்கே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

“இல்லை, நான் இனிமேல் அரசியலுக்கு வருவதற்கு எதிர்பார்க்கவில்லை. அதேவேளை, நான் அமைச்சராகப் பதவி வகித்த காலப்பகுதியில் எனக்கு வழங்கப்பட்ட பொறுப்புகள் அனைத்தையும் நாட்டுக்காக முழு அர்ப்பணிப்புடன் நிறைவேற்றியுள்ளேன்.” – என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்திலேயே அலி சப்ரி முதன்முறையாக அரசியலுக்குள் பிரவேசித்தார். அப்போது அவருக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடாக நாடாளுமன்றத் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவி வழங்கப்பட்டதுடன், நீதி அமைச்சராகவும் அவர் நியமிக்கப்பட்டார்.

நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட வேளையில் அவர் தனது அமைச்சுப் பதவியைத் துறந்தார். எனினும், அதன் பின்னர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற அவசர சூழலில், நாட்டின் நிதி அமைச்சராகவும், பின்னர் வெளிவிவகார அமைச்சராகவும் கடமையாற்றி சர்வதேச ரீதியில் நாட்டின் நலனுக்காகப் பங்காற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.