கலைஞர் சங்கீத்ஷனின் விடுதலை குறித்து ஜனாதிபதி – சிறீதரன் தொலைபேசி பேச்சு!
சொல்லிசைக் கலைஞரான சங்கீத்ஷனின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் இடையில் நேற்று தொலைபேசி உரையாடல் நடைபெற்றுள்ளது.
இந்த உரையாடலின் போது, கலைஞர் சங்கீத்ஷனுக்குப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை என்பதை ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். இதன் காரணமாக, சாதாரண நீதிமன்ற முறைமையின் கீழ் அவருக்கான பிணைக் கோரிக்கையைச் சட்டத்தரணிகள் ஊடாக விடுக்க முடியும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, சிறீதரன் எம்.பியிடம் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அறிவுறுத்தலுக்கு இணங்க, அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரருக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் இடையில் நாடாளுமன்ற வளாகத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இந்த உரையாடலின் போதும், ஜனாதிபதியின் அறிவிப்பு தொடர்பில் அமைச்சர் சந்திரசேகர் உறுதிப்படுத்தியுள்ளார். அத்துடன், அவர் கலைஞர் சங்கீத்ஷனின் தாயாருடனும் தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு பேசியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
