வருண ஜயசுந்தரவைக் கைது செய்யும் எண்ணம் இல்லை! – மேல்முறையீட்டு நீதிமன்றத்துக்குச் சட்டமா அதிபர் அறிவிப்பு.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் வருண ஜயசுந்தரவைப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யவோ அல்லது தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தவோ எவ்வித தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என்று சட்டமா அதிபர் மேல்முறையீட்டு நீதிமன்றத்துக்கு இன்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் விசாரணைகளின் கீழ், எவ்வித நியாயமான காரணங்களும் இன்றித் தான் கைது செய்யப்படுவதைத் தடுத்து உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் வருண ஜயசுந்தரவினால் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இம்மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ள சட்டமா அதிபர் சார்பில் நீதிமன்றில் முன்னிலையான பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹெரத் இந்த விவரத்தை மன்றுக்குத் தெரியப்படுத்தினார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளில் தெரியவந்துள்ள தகவல்களுக்கமைய, வருண ஜயசுந்தரவைக் கைது செய்யும் எண்ணம் தற்போதைக்கு இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

சட்டமா அதிபர் தரப்பின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, வருண ஜயசுந்தரவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மீதான மேலதிக விசாரணையை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை ஒத்திவைப்பதற்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.