பிரான்ஸ் ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி!

பிரான்ஸில் நடைபெற்று வரும் ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, செவ்வாய்க்கிழமை (ஜூன் 16) பங்கேற்றார்.

ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், ஸ்லோவாக்கியாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஒரு வார கால அரசுமுறைப் பயணத்தை சனிக்கிழமை (ஜூன் 13) தொடங்கினார்.

தனது பயணத்தின் முதல்கட்டமாக பிரான்ஸின் துறைமுக நகரான நைஸை சென்றடைந்த பிரதமர், அங்கு ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 14) அந்நாட்டின் அதிபர் இமானுவல் மேக்ரானுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

முதலில் பிரான்ஸ் பயணம் முடிந்து ஸ்லோவோக்கியா சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் பெல்லேக்ரினியை சந்தித்து கலந்துரையாடினார். இரு நாடுகளின் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் மோடி, ஜி 7 உச்சி மாநாட்டில் பங்கேற்க எவியான் லெ பெய்ன்ஸ் நகருக்கு சென்றார்.

இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்ததாவது:

ஜி7 உச்சி மாநாட்டுக்காக பிரான்சின் எவியான் நகரை வந்தடைந்தேன். உலகத் தலைவர்களுடன் கலந்துரையாடுவதற்கும், உலகளாவிய பிரச்னைகள் குறித்து கலந்துரையாடுவதற்கும் ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று பதிவிட்டார்.

இந்த நிலையில், ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்று உலகத் தலைவர்களுடன் புகைப்படம் எடுத்த பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உடன் சிறிது நேரம் உரையாடினார்.

ஜி7 மாநாடு என்பது உலகப் பொருளாதாரத்தில் முன்னணியில் உள்ள ஏழு நாடுகளின் தலைவர்கள், ஆண்டுதோறும் கூடி சர்வதேச விவகாரங்கள் குறித்து விவாதிக்கும் ஒரு அமைப்பாகும். அமெரிக்கா, பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஜப்பான் ஆகியவை இதன் உறுப்பு நாடுகளாக உள்ளன. அதன்படி, இந்த ஆண்டுக்கான ஜி7 உச்சி மாநாடு பிரான்ஸ் நாட்டின் ஈவியன் நகரில் ஜூன் 15 முதல் 17 வரை நடைபெறுகிறது.

ஜி7 அமைப்பில் இந்தியா உறுப்பினராக இல்லாத போதிலும், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானின் அழைப்பை ஏற்று இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.