திருவள்ளூர் அருகே பயங்கரம்: இறால் பதப்படுத்தும் நிறுவனத்தில் வாயு கசிந்து 7 பேர் உயிரிழப்பு; பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அச்சம்!
கன்னிகைப்பேர் இறால் பதப்படுத்தும் தனியார் நிறுவனத்தில் வாயு கசிவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 7 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், கன்னிகைப்பேர் கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான இறால் பதப்படுத்தும் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் இரவு, பகல் என இரண்டு ஷிப்ட்களில் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று காலை சுமார் 120 பேர் பணியில் இருந்த போது திடீரென அம்மோனியா வாயுக் கசிவு ஏற்பட்டது. இதில், இந்த வாயுவை சுவாசித்த சுமார் 40 பேர் மயக்கம் அடைந்தனர். உடனே அவர்களை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்று அனுமதித்தனர்.
தற்போது இதில் 7 பேர் பலியாகியுள்ளனர். அதேசமயம் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் தெரிய வந்துள்ளது. இதனால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் மேலும் சிலருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அமோனியா வாயு நேரடியாக உடலுக்குள் சென்றதால் நுரையீரல் வீங்கி கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே தகவல் அறிந்த பெரியபாளையம் காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வாயு கசிவுக்ககான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
