ஆடைத்துறை வர்த்தகர்களுடன் ஜனாதிபதி உயர்மட்டப் பேச்சு! – டொலர் வருமானத்தை அதிகரிக்கப் புதிய வியூகம்.

டொலர் வருமானத்தை அதிகரித்து, நாட்டில் பலமானதொரு ஏற்றுமதிப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்காக ஆடைத் துறையின் பிரச்சினைகளுக்கு வழங்கக்கூடிய உடனடித் தீர்வுகள் குறித்து ஆராயும் உயர்மட்டக் கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

நாட்டின் முன்னணி ஆடைத் துறை வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் கலந்துகொண்ட இந்தக் கலந்துரையாடலில், ஆடைத் துறை எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் புதிய ஏற்றுமதித் திட்டத்தை வெற்றிகரமாக்குவதற்குத் தேவையான வசதிகளை அரச அனுசரணையுடன் வழங்குவது குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

இங்கு உரையாற்றிய ஜனாதிபதி, நாட்டின் ஏற்றுமதிப் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு அரசு அதிகபட்ச ஆதரவை வழங்கும் என உறுதியளித்ததுடன், அதற்கான எதிர்காலக் கொள்கைத் திட்டங்கள் குறித்தும் விளக்கமளித்தார்.

கைத்தொழிற்சாலைகளைக் கிராமப்புறங்களுக்கு விரிவுபடுத்துவதன் மூலம் ஏற்றுமதிப் பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்த முடியும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதற்காக ஒன்றிணையுமாறு முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார். இதற்காகத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கைத்தொழிற்சாலைக் கட்டடங்களை அரசின் முழுமையான அனுசரணையுடன் வழங்குவதற்கான “Plug and Play” முறைமை குறித்தும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து விவரித்த ஜனாதிபதி, ரூபாவில் மேற்கொள்ளப்படும் முதலீடுகள் அதிகரித்த போதிலும், இதனால் டொலருக்கு ஏற்படும் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு டொலர் ஈட்டும் வழிகளை வலுப்படுத்துவது அத்தியாவசியமானது என்று சுட்டிக்காட்டினார். ரூபா செலவினங்களைக் கட்டுப்படுத்தி, டொலர் வருமானத்தை அதிகரிப்பதன் மூலம் மட்டுமே பொருளாதார மறுமலர்ச்சியை ஏற்படுத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

முதலீட்டாளர்கள் எதிர்கொள்ளும் காணிப் பிரச்சினைகள் குறித்து இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது. காணிகளின் பெறுமதி மற்றும் கொள்கை ரீதியான ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கு அரசு நேரடியாகத் தலையிடும் என்று தெரிவித்த ஜனாதிபதி, அதற்கான சட்ட மறுசீரமைப்புகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

அதேபோல், வற் வரி முறைமை காரணமாக உள்நாட்டு மூலப்பொருள் வழங்குநர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் ஜனாதிபதியின் அவதானம் செலுத்தப்பட்டதுடன், அதன்போது வழங்கக்கூடிய மாற்றுச் சலுகைகள் குறித்த முறையான முன்மொழிவுகளை விரைவாகச் சமர்ப்பிக்குமாறு வர்த்தகர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.

சந்தை வாய்ப்புகளை அதிகரிப்பதற்காகச் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை விரிவுபடுத்துதல் மற்றும் வெளிநாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தி அந்த நாடுகளிலிருந்து கிடைக்கும் கோட்டா அளவுகளை அதிகரிப்பது குறித்தும் இங்கு ஆராயப்பட்டது.

வர்த்தகம் மற்றும் முதலீட்டு நடவடிக்கைகளை மேலும் திறம்படச் சர்வதேசத் தரத்துக்கு மேற்கொள்வதற்காக, “வர்த்தகத்துக்கான தேசிய ஒற்றைச் சாளரம்” இந்த ஜூலை மாத இறுதிக்குள் நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், முதலீட்டிற்கான தேசிய ஒற்றைச் சாளரத்தை இவ்வருட இறுதிக்குள் பூர்த்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.

சட்டவிரோதமான முறையில் ஈட்டப்படும் பணம் எமது நாட்டிலிருந்து வெளியில் செல்வதைத் தடுப்பதற்காக, சட்ட மற்றும் தொழில்நுட்ப வழிமுறைகளை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

தமது பிரச்சினைகளை ஜனாதிபதியிடம் நேரடியாக முன்வைக்க வாய்ப்பளித்தமைக்காக முதலீட்டாளர்கள் இதன்போது ஜனாதிபதிக்குத் தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர். அத்துடன், தமது பணிகளை முன்னெடுத்துச் செல்லும்போது ஏற்படும் நடைமுறைச் சிக்கல்கள் குறித்துச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்கு மாதாந்தம் ஒரு சந்திப்பை வழங்குமாறு விடுத்த கோரிக்கையையும் ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார்.

இந்த விசேட சந்திப்பில், தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் நாயகம் உபுல்மலி பிரேமதிலக, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் தலைவர் மங்கள விஜேசிங்ஹ மற்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம், இலங்கை சுங்கம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உயர்மட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.