தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் வீதியில் வைத்து வெட்டிக்கொலை! – காதல் விவகாரத்தால் நேர்ந்த கொடூரம் – இரண்டு சந்தேகநபர்களுக்கு வலைவீச்சு.

மாத்தறை மாவட்டம், வெலிகமை பிரதேசத்தில் தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிந்து வந்த இளம் உத்தியோகத்தர் ஒருவர், நேற்று சனிக்கிழமை கூர்மையான ஆயுதங்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தக் கொடூர சம்பவம் காதல் விவகாரம் காரணமாகவே அரங்கேறியுள்ளது என்று பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மேற்படி சம்பவத்தில் வெலிபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞரே மிகக் கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

வெலிகமை நகரில் அமைந்துள்ள தனியார் நிறுவனமொன்றில் கடமையாற்றி வரும் மேற்படி இளைஞர், நேற்று தனது பணி நிமித்தமாக வீதியில் நடமாடிக் கொண்டிருந்த போதே, அங்கு மறைந்திருந்த ஆயுததாரிகளான இருவரால் திடீரென வழிமறிக்கப்பட்டுத் சரமாரியாக வெட்டப்பட்டுள்ளார்.

கழுத்து மற்றும் உடல் பாகங்களில் பலத்த வெட்டுக் காயங்களுக்கு உள்ளாகிய அந்த இளைஞர், அதிகளவிலான இரத்தப் போக்குக் காரணமாக சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

பொலிஸார் நடத்திய ஆரம்பக்கட்ட விசாரணைகளின் படி, உயிரிழந்த இளைஞருக்கும் அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் இடையில் நிலவி வந்த நீண்டகாலக் காதல் விவகாரம் மற்றும் அதனால் ஏற்பட்ட தனிப்பட்ட குரோதமே இந்தத் திட்டமிட்ட படுகொலைக்குப் பிரதான காரணம் எனப் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சடலம், பிரேத பரிசோதனைக்காகப் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கொடூரப் படுகொலையைச் செய்துவிட்டுத் தப்பியோடியுள்ள சந்தேகநபர்கள் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ள பொலிஸார், அவர்களைக் கைது செய்வதற்காக விசேட தேடுதல் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.