கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்!

கர்நாடகத்தில் முகப்பு விளக்கு செயலிழந்ததால் 90 கி.மீ. வரை மொபைல் டார்ச் வெளிச்சத்திலேயே அரசுப் பேருந்தை ஓட்டுநர் இயக்கிய நிகழ்வு அரங்கேறியுள்ளது.

கர்நாடக மாநிலம், கலபுரகி நகரிலிருந்து சுமார் 90 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிஞ்சோலி நகருக்கு அரசின் கடைசிப் பேருந்து இரவுநேரத்தில் வழக்கம்போல் புறப்பட்டு சென்றிருக்கிறது. இந்த நிலையில் பேருந்தின் முகப்பு விளக்கு திடீரென செயலிழந்ததாகக் கூறப்படுகிறது.

இரவு நேரம் என்பதால் அந்த நேரத்தில் பேருந்தை நிறுத்தி சரிசெய்வது என்பது மிகவும் சிரமமான செயல் ஆகும். இந்த சூழலில்தான் நடத்துநர் தனது மொபைல் டார்ச்சைப் பயன்படுத்தி ஓட்டுநருக்கு உதவியுள்ளார். பிறகு ஓட்டுநரும் அந்த மொபைல் வெளிச்சத்திலேயே பேருந்தை இயக்கியிருக்கிறார்.

பயணத்தின் எந்தக் கட்டத்தில் பேருந்தின் முகப்பு விளக்குகள் பழுதடைந்தன என்பது தெரியவில்லை. இருப்பினும், பாதுகாப்பற்ற சூழலிலேயே பயணத்தைத் தொடர வேண்டிய கட்டாயம் பயணிகளுக்கு ஏற்பட்டது. தற்போது இதுதொடர்பான விடியோவும் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

கர்நாடகத்தில் நடந்த இந்தச் சம்பவம் குறித்து எதிர்க்கட்சிகள் காங்கிரஸ் அரசை கடுமையாகச் சாடியுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.