டெங்கு கொத்தணிகள் பதிவானால் பல்கலைக்கழகங்கள் இழுத்து மூடப்படும்! – பிரதி அமைச்சர் எச்சரிக்கை.
பல்கலைக்கழகங்களுக்குள் டெங்கு நோயாளர்கள் கொத்தணிகளாக அடையாளம் காணப்பட்டால், சுகாதாரப் பிரிவினரின் அறிவுறுத்தல்களுக்கு அமைய சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வி மற்றும் உயர் கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
“தேசிய மட்டத்தில் டெங்கு தொற்று நிலைமை தீவிரமடைந்துள்ளது என்று சுகாதாரப் பிரிவினர் அறிவித்துள்ளனர். அத்துடன், அதிக அவதானம் மிக்க பல மாவட்டங்களும் பிராந்தியங்களும் அடையாளம் காணப்பட்டு பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தத் தொற்று நிலைமையிலிருந்து கல்வி மற்றும் உயர் கல்வி நிறுவனங்களைப் பாதுகாப்பதற்காகப் பல விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒருகட்டமாக, உயர் கல்வி நிறுவனங்களில் டெங்கு நோயாளர்கள் கொத்தணிகளாகப் பதிவானால், சுகாதாரப் பிரிவினரின் அறிவுறுத்தல்களுக்கு அமைய அவற்றை தற்காலிகமாக மூட வேண்டியேற்படும்.
டெங்கு நோயாளர்கள் பதிவானதன் காரணமாகத் தற்காலிகமாக மூடப்பட்ட கொழும்பிலுள்ள கட்புல அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகம் மூடப்பட்டதற்கும் இதுவே காரணமாகும். எனினும், சுகாதாரப் பிரிவினரின் வழிகாட்டல்களுக்கு அமைய, எதிர்வரும் 13ஆம் திகதி அந்தப் பல்கலைக்கழகத்தை மீண்டும் திறப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை, டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவது மற்றும் மாணவர்களின் பாதுகாப்புத் தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் உரிய வழிகாட்டல்கள் ஏற்கனவே விடுக்கப்பட்டுள்ளன.” – என்றார்.
