நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை: கடமையின் போது துடிதுடித்து மரணித்த 7 அதிகாரிகளுக்கு நெஞ்சார்ந்த அஞ்சலி! – “அவர்கள் உண்மையான வீரர்கள்” என்று சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவிப்பு.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட பயங்கர வன்முறையின் போது, தங்களது கடமையைச் செய்ய முற்பட்டு மரணமடைந்த ஏழு சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இலங்கை சிறைச்சாலைகள் திணைக்களம் தனது நெஞ்சார்ந்த அஞ்சலியைச் செலுத்தியுள்ளது.

இது தொடர்பாகச் சிறைச்சாலைகள் திணைக்களம் விடுத்துள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில், உயிரிழந்த அதிகாரிகள் அனைவரும் “தங்களது கடமையை நிறைவேற்றுவதற்காகத் தங்களின் உயிர்களையே தியாகம் செய்த உண்மையான வீரர்கள்” எனப் புகழாரம் சூட்டியுள்ளது.

அத்துடன், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மற்றும் திணைக்களத்தின் ஒட்டுமொத்தப் பணியாளர்கள் சார்பாக, உயிரிழந்த அதிகாரிகளின் குடும்பத்தினருக்குத் தங்களது ஆழ்ந்த இரங்கலையும் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துக் கொண்டுள்ளது.

நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட பயங்கர மோதலின் போது கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போதே இந்த அதிகாரிகள் கைதிகளின் கொடூரமான தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

இவ்வாறு மரணமடைந்த அதிகாரிகளின் விவரம் வருமாறு:-

* ஜெயிலர் எஸ்.எச்.ஜி. சந்திரவம்ச
* ஜெயிலர் சாஜன்ட் ஆர்.பி.ஆர். சஞ்சீவ
* ஜெயிலர் சாஜன்ட் பி.என்.என். தரங்க
* ஜெயிலர் சாஜன்ட் டி.என்.ஆர். திலகசிறி
* ஜெயிலர் சாஜன்ட் டி.டபிள்யூ. புஷ்பகுமார
* ஜெயிலர் சாஜன்ட் எஸ்.டி.எஸ். அபேவர்தன
* ஜெயிலர் சாஜன்ட் ஏ.டி. தரங்க

நாட்டின் சிறைச்சாலை வரலாற்றில் கடமையின் போது ஒரே தருணத்தில் இத்தனை அதிகாரிகள் உயிரிழந்தமையானது ஒட்டுமொத்த பாதுகாப்புத் துறையினரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவர்களுக்கான இறுதிச் சடங்குகளைப் பூரண திணைக்கள மரியாதையுடன் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று சிறைச்சாலை திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave A Reply

Your email address will not be published.