ராய்காட்: வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 3,000 எரிவாயு சிலிண்டர்கள்

மும்பை,

மராட்டிய மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக பல்வேறு நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. ராய்காட் பகுதியில் அமைந்துள்ள எல்.பி.ஜி. எரிவாயு சிலிண்டர் நிரப்பு மையத்தின் பாதுகாப்புச் சுவர் வெள்ளத்தில் இடிந்து விழுந்தது. இதனால், அங்கிருந்த சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் அடித்துச் செல்லப்பட்டன. ஆற்றின் கரையோரங்களில் மிதந்து வந்த சிலிண்டர்களை பொதுமக்கள் சிலர் போட்டி போட்டுக்கொண்டு எடுத்துச் சென்றனர்.

அடித்துச் செல்லப்பட்ட சிலிண்டர்களில் சில சிலிண்டர்கள் முழுமையாக நிரப்பட்டது என்பதால், அவை வெடித்துச் சிதறும் அபாயம் உள்ளதாக ராய்காட் மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார். மேலும், எடுத்துச்செல்லப்பட்ட சிலிண்டர்களால் ஏற்படும் ஆபத்தை உணர்ந்து மக்கள் உடனடியாக அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.