வயநாடு நிலச்சரிவு! பலி எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு!
வயநாடு நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தின் மெப்பட்டியில் தனியாா் நிறுவனத்தின் சுரங்கம் தோண்டும் பணி நடைபெற்ற பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 7) அன்று திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, நேற்று வரை அங்கு நடைபெற்ற மீட்புப் பணிகளில் நிலச்சரிவில் சிக்கி பலியான 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. மேலும், மாயமான இருவரைத் தேடும் பணிகள் இன்று (ஜூலை 10) காலை மீண்டும் தொடங்கின.
பேரிடரில் மாயமான மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நில அளவையாளர் ராகேஷ் குச்சாய்த் மற்றும் கட்டுமான மேலாளர் விக்ரம் ரானா ஆகியோரைத் தேடும் பணிகள் 4 ஆவது நாளான இன்று காலை முதல் மீண்டும் தொடங்கிய நிலையில், பலியான ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, இன்னும் கண்டுபிடிக்கப்படாத ஒருவரைத் தேடும் பணிகளில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்பு படையினர் மற்றும் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
வயநாடு மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களை இணைப்பதற்காக நடைபெற்று வந்த இந்த சுரங்கம் தோண்டும் பணிகளுக்கு முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசு அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.
