நீர்கொழும்பு சிறைச்சாலை விவகாரம்: நீதி அமைச்சருடன் செயலாளரும் சமமான பொறுப்பேற்க வேண்டும்.

ஐக்கிய தேசியக் கட்சி எப்போதும் அரசியல் ரீதியாக மிகவும் நாகரிகமான முறையிலும், தார்மீகப் பொறுப்புக்கூறல்களுடனும் செயற்பட்டு வந்துள்ளது என்று அக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்களைச் சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர் இதனைக் கூறினார் என்று கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

1988ஆம் ஆண்டு மட்டக்களப்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற அசம்பாவிதத்தின் போது, அப்போதைய நீதி அமைச்சர் நிஸ்சங்க விஜேரத்ன வெளிநாடு சென்றிருந்த போதிலும், சம்பவத்துக்குத் தார்மீகப் பொறுப்பேற்று உடனடியாகப் பதவியை இராஜிநாமா செய்தமையை அவர் நினைவுகூர்ந்தார். அவரது பிரதி அமைச்சராக இருந்த ஷெல்டன் ரணராஜாவும் அதே காரணத்துக்காகத் தனது பதவியைத் துறந்ததையும் ரணில் சுட்டிக்காட்டினார்.

அதேபோல், அப்போதைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் வழிகாட்டுதலின்படி, 1988 ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வியடைந்த போல் பெரேரா, எவ்வித தயக்கமும் இன்றி உடனடியாகப் பதவியை இராஜிநாமா செய்த நிகழ்வையும் அவர் கோடிட்டுக் காட்டினார். இத்தகைய முன்னுதாரணங்களே ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் ஒழுக்கத்தை வெளிப்படுத்துகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் விவகாரத்தில் கருத்துத் தெரிவித்த ரணில் விக்கிரமசிங்க, “நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கு அதிகாரிகளுக்குப் போதிய கால அவகாசம் இருந்தது. இருப்பினும் ஏன் இது குறித்து நீதி அமைச்சின் செயலாளருடன் பேசவில்லை?” என்று கேள்வி எழுப்பினார்.

இந்தச் சம்பவத்துக்கு நீதி அமைச்சரைப் போலவே, நீதி அமைச்சின் செயலாளரும் சமமான பொறுப்பேற்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், இன்றைய அரசியல் சூழலில் இத்தகைய பொறுப்புக்கூறல் அவசியம் என்பதைச் சுட்டிக்காட்டினார்.

Leave A Reply

Your email address will not be published.