அவசியமற்ற விளக்கமறியலே சிறை நெருக்கடிக்குக் காரணம் – திஸ்ஸ அத்தநாயக்க குற்றச்சாட்டு.

சிறைச்சாலைகளில் தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான நெருக்கடி நிலைமைக்கு, ஒவ்வொரு சந்தேகநபரையும் விளக்கமறியலில் வைக்குமாறு பொலிஸாரும் சட்டமா அதிபர் பிரிவும் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுக்கும் நடைமுறையே பிரதான காரணமாக அமைகின்றது என்று முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

குற்றத்தின் தன்மையை ஆராயாமல், சந்தேகநபர் ஒருவருக்கு வழங்கப்படும் முதல் தண்டனையாக விளக்கமறியலில் அடைப்பதையே தற்போதைய நடைமுறையாகக் கொண்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

சிறைப்படுத்தாமல் வெளியில் வைத்தே விசாரிக்கக்கூடிய வழக்குகளுக்கும் இந்த நடைமுறை பின்பற்றப்படுவது கவலைக்குரியது என்றும் ஊடகங்களிடம் அவர் குறிப்பிட்டார்.

கைதிகள் கொள்ளளவுக்கு அதிகமாகச் சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ளமையால், அவர்களைப் பராமரிப்பதற்கான அரச செலவுகள் பெருமளவில் அதிகரித்துள்ளன என்றும் அவர் கூறினார்.

தற்போது சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்கள் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த நெருக்கடிக்குத் தீர்வாக, அவசியமற்ற முறையில் சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்கும் நடைமுறையைத் தவிர்த்து, அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை நேரடியாக நீதிமன்றத்தின் ஊடாக விசாரணை செய்வதை ஊக்குவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இது தொடர்பாகப் பல முன்மொழிவுகள் தற்போது நீதி அமைச்சில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.