கட்டுப்பாட்டை இழந்த மோ. சைக்கிள் மதிலில் மோதி இளைஞர் ஒருவர் பலி!
கொழும்பு மாவட்டம், கோமாகமை பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
கெஸ்பவை பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞர் ஒருவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீதான கட்டுப்பாட்டை இழந்துள்ளார். இதன் விளைவாக, மோட்டார் சைக்கிள் வீதியோரத்தில் இருந்த மதில் ஒன்றின் மீது பலமாக மோதியுள்ளது.
இந்த விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான மேற்படி இளைஞர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
