ஜந்தர் மந்தரில் குவிந்த 60 மெட்ரிக் டன் குப்பை: இரவோட இரவாக களமிறங்கிய டெல்லி மாநகராட்சி!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்டம் நடைபெற்று வந்த டெல்லி ஜந்தர் மந்தர் திடலில் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இரவு, பகலாக நடைபெற்றுவரும் இப்பணியின் இறுதியில் ஜந்தர் மந்தர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்களில் இருந்து 60 மெட்ரிக் டன் குப்பை அகற்றப்படும் என டெல்லி மாநகராட்சி தெரிவித்துள்ளது.

நீட் முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி தில்லி ஜந்தர் மந்தர் திடலில் ஜூன் 20 ஆம் தேதி முதல் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் உண்ணாவிரதம் உள்பட நாடு முழுவதிலுமிருந்து கிடைத்த இளைஞர்கள், மாணவர்கள் ஆதரவால், மத்திய அமைச்சர் பதவியை தர்மேந்திர பிரதான் நேற்று ராஜிநாமா செய்தார்.

போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக நினைத்து களத்தில் இருந்த இளைஞர்கள் பலர் கலைந்து சென்றனர். தற்போது 36 நாள்களுக்குப் பிறகு ஜந்தர் மந்தர் திடல் வெறிச்சோடி காணப்படுகிறது.

இதனால் திடலை சுத்தம் செய்யும் பணிகளில் டெல்லி மாநகராட்சி களமிறங்கியுள்ளது. டால்ஸ்டாய் மார்க், ஜந்தர் மந்தர், சன்சத் மார்க், ஜெய் சிங் மார்க் உள்ளிட்ட பகுதிகளில் சுத்தம் செய்யும் பணிகளில் தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

டெல்லி மாநகராட்சி அறிவிப்பின்படி, ஜந்தர் மந்தர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 75 தூய்மைப் பணியாளர்கள் இரவு பகலாக பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சனிக்கிழமை இரவு வரை 40 மெட்ரிக் டன் கழிவுப் பொருள்கள், குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை காலை முதல் பிற்பகல் வரை 12 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன.

குப்பைகளை வெளியேற்ற 8 லாரிகளும், 2 கனரக லாரிகளும் அமைக்கப்பட்டுள்ளன. சாலைகளை தூய்மைப்படுத்த 3 காற்றழுத்த தெளிப்பான்கள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் சாலையை பெருக்குவதற்கான இயந்திரமும் தூய்மைப் பணியாளர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த தூய்மைப் பணியோடு இணைந்து, மறுசீரமைப்புப் பணிகளையும் டெல்லி மாநகராட்சி செய்து வருகிறது. அதாவது, போராட்ட வாசகங்களை நீக்கிவிட்டு சுவர்களுக்கு வர்ணம் பூசுவது, நடைபாதை சேதங்களை சீரமைப்பது, நடைபாதை கற்களை மாற்றுவது போன்ற பணிகளையும் மாநகராட்சி செய்து வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.