ஆந்திரத்தில் 16,000 பள்ளிகளில் வெறும் ஒரேயொரு ஆசிரியர்!
ஆந்திரப் பிரதேசத்தில், 16,000-க்கும் அதிகமான பள்ளிக்கூடங்கள் வெறும் ஒரேயொரு ஆசிரியரைக் கொண்டு இயங்குவதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மாநிலங்களவையில், உறுப்பினர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா நாட்டிலுள்ள ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் வெறும் ஒரேயொரு ஆசிரியரைக் கொண்டு இயங்கும் பள்ளிகள் குறித்து மத்திய கல்வித்துறை அமைச்சகத்துக்குக் கேள்வி எழுப்பினார்.
இந்தக் கேள்விக்கு, நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்ட பதிலில், 2025-26 ஆம் ஆண்டுக்கான “கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் அமைப்பு” தரவுகளின்படி ஆந்திரத்தில் 16,000-க்கும் அதிகமான பள்ளிகள் ஒரேயொரு ஆசிரியரைக் கொண்டு இயங்கி வருவது தெரியவந்துள்ளது.
இதன்படி, ஆந்திரம் முழுவதும் 2025-26 ஆம் ஆண்டில் மட்டும் அரசு, தனியார் உள்ளிட்ட அனைத்து நிர்வாகங்களின் கீழ் செயல்படும் 16,357 பள்ளிகள் வெறும் ஒரு ஆசிரியரை மட்டுமே கொண்டு செயல்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்துடன், ஆந்திரம் முழுவதும் தொடக்கக் கல்வி நிலையில் 74,616 ஆசிரியர்களும், உயர் தொடக்கக் கல்வி நிலையில் 7,254 ஆசிரியர்களும், இடைநிலைக் கல்வி நிலையில் 87,545 ஆசிரியர்களும், மேல்நிலைக் கல்வி நிலையில் 31,710 ஆசிரியர்களும் பணியாற்றி வருவதாகக் கூறப்பட்டுள்ளது.
இருப்பினும், அனுமதிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் அல்லது காலியிடங்கள் குறித்து மாநில வாரியான விவரங்களை மத்திய அரசு வெளியிடவில்லை.
கல்வி என்பது பொதுப்பட்டியல் சார்ந்தது எனவும், ஆசிரியர்களின் பணி நியமனம், பணி அமர்த்தல் மற்றும் பணி நிபந்தனைகள் ஆகியவை அந்தந்த மாநில அரசுகளின் பொறுப்பு எனவும் மத்திய அரசு பதிலளித்துள்ளது.
