ஏமாற்று அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க மக்கள் அறிவால் பலம் பெற வேண்டும்! – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் உரை.
நாட்டில் தொடரும் ஏமாற்று அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டுமானால், மக்கள் அறிவால் பலம் பெற்ற சமூகமாக மாற வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற ஐக்கிய கல்வி ஊழியர் சங்கத்தின் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
“துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் விலையிலேயே எரிபொருள்களைப் பெற்றுத் தருவோம் என்று தேர்தல் காலத்தில் கூறினர். ஆனால் இன்று அது நிறைவேற்றப்படவில்லை. உலகளாவிய எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியிலும் நமது நாட்டில் மாத்திரமே தொடர்ந்து எரிபொருள் மீது வரி விதிக்கப்பட்டு வருகின்றது. மின்சாரக் கட்டணத்தை மூன்றில் ஒன்றால் குறைப்பதாகக் கூறிவிட்டு தற்போது உயர்த்தியுள்ளனர். புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு முன்னுரிமை அளிப்பதாகக் கூறிவிட்டு, இன்று எரிபொருள் மின் உற்பத்தி நிலைய மாபியாவின் அடிமையாக அரசாங்கம் மாறியுள்ளது.
அன்று விவசாயிகளுடன் இணைந்து நெற்கதிர்களைக் கடித்துக் கொண்டு, ஒரு கிலோ நெல்லுக்கு 150 ரூபா உத்தரவாத விலையைப் பெற்றுத் தருவதாகக் கூறினர். ஆனால் ஒரு கிலோ நெல்லை உற்பத்தி செய்யவே 137 ரூபா செலவாகின்ற நிலையில், 120 ரூபாவையே வழங்கி விவசாயிகளுக்கு நட்டத்தை ஏற்படுத்தியுள்ளனர். இதற்கெல்லாம் மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதே காரணமாகும். புதிய விடயங்களை ஒதுக்காமல் அனைத்து துறைகளையும் புதிய கண்ணோட்டத்துடன் அணுக வேண்டும்.” – என்றார்.
கல்வித் துறை தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“நாட்டில் கல்வித் துறையின் 6 முக்கிய பிரிவுகளிலும் குறைபாடுகள் மற்றும் ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றன. நாட்டில் 2 இலட்சத்து 50 ஆயிரம் ஆசிரியர்களும், 15 ஆயிரம் அதிபர்களும், 10 ஆயிரத்து 145 பாடசாலைகளும் உள்ள நிலையில், பல பாடசாலைகள் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
ஐக்கிய மக்கள் சக்தி எப்போதுமே பொய் வாக்குறுதிகளை வழங்காது. ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டிய எஞ்சிய 2/3 சம்பளப் பங்கைப் பெற்றுக்கொடுக்கவும், அவர்களின் குறைகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். கற்பனை உலகங்களை உருவாக்கி ஆசிரியர்களை அனாதரவாக்க மாட்டோம்.
மாகாண பாடசாலைகளுக்கும் தேசிய பாடசாலைகளுக்குமான நிதி ஒதுக்கீடு மற்றும் நன்மைகளில் பாரிய இடைவெளிகள் காணப்படுகின்றன. இசுரு, சுப்பிரி, நவோதய போன்ற பல்வேறு திட்டங்கள் வந்தாலும், இறுதியில் ஆசிரியர்களும் மாணவர்களுமே பாதிக்கப்படுகின்றனர்.
உலகளவில் தகவல் தொழில்நுட்பம் முன்பள்ளியிலிருந்தே ஆங்கில மொழியில் கற்பிக்கப்படும் நிலையில், இங்கு தரம் 6 முதல் 13 வரை தாய்மொழியிலேயே கற்பிக்கப்படுகிறது. திறமைகளை மேம்படுத்தும் முறையான வேலைத்திட்டம் கல்வி முறையில் இல்லை. ஆங்கில மொழி எழுத்தறிவை மேம்படுத்துவதுடன், பாரம்பரிய காலாவதியான எண்ணங்களிலிருந்து நாம் வெளியேற வேண்டும்.
குழந்தைகள் பிறந்ததிலிருந்து 5 வயது வரை மூளையின் 75 சதவீத வளர்ச்சி அடைகின்றது. எனவே, 1 ஆம் வகுப்பிலிருந்து அல்லாமல் முன்பள்ளியிலிருந்தே கல்வியை நவீனமயமாக்க வேண்டும். மனனம் செய்யும் முறையிலிருந்து விலகி, சவால்களை எதிர்கொள்ளும் கல்வியை நோக்கிச் செல்ல வேண்டும்.
கடும்போக்கு இடதுசாரிகள் தனியார் கல்வியை விமர்சித்துவிட்டுத் தமது பிள்ளைகளைத் தனியார் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்புகிறார்கள். அவர்களின் பிள்ளைகளுக்குக் கிடைப்பது போன்ற வாய்ப்புகள் நாட்டின் ஏனைய பிள்ளைகளுக்கும் கிடைக்க வேண்டும். அதேவேளை, முதலிடம் நலன்புரி அரசின் இலவசக் கல்விக்கே வழங்கப்பட்டு அது மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும்.
இந்நிகழ்வில் கல்வித் துறையின் மனித வளப் பிரச்சினைகள், உட்கட்டமைப்பு வசதியின்மை மற்றும் ‘பிரபஞ்சம்’ வேலைத்திட்டம் ஊடாக ஸ்மார்ட் கல்வியை ஊக்கப்படுத்துவது குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் விரிவாக எடுத்துரைத்தார்.
